பாடப்புத்தகத்தை முழுமையாக படித்து கிரகித்தல் என்பது சிலருக்கு கைவந்த கலை. ஆனால் பலருக்கு அது, அலுப்பையும், சோர்வையும் தரக்கூடிய விஷயமாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் எளிமையாக படிப்பதற்கு என்ன வழி என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.
மாணவர்கள் அந்த நுட்பத்தை தெரிந்துவைத்துக் கொண்டால், புத்தகத்தோடு மல்லுகட்டாமல், எளிய முறையில் படிக்க முடியும். முக்கியத்துவம் குறிப்பெடுத்தல் என்பது சிறந்த கற்றலில் முக்கியமான ஒரு அம்சம். பல விஷயங்களை எளிமையாக புரிந்துகொள்ள குறிப்பெடுத்தல் உதவுகிறது. உங்களின் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அந்த பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், நீங்கள் பலவகையிலும் பயன்பெறுவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது அவர் கூறுவதை குறிப்பெடுத்துக் கொள்ளலாம். பல தேர்வுகளில் உங்களின் ஆசிரியர்தான், உங்களது விடைத்தாளை திருத்தி மதிப்பெண் இடுபவர். அவர் அந்த பாடத்தில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு முக்கியத்துவம் அளித்து விளக்குவார். பாடம் நடத்துகையில் அந்த விஷயத்தை அவர் திரும்ப திரும்ப சொல்லுவார். அந்த விஷயம், எது என்பதை நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வில், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதும்போது உங்களுக்கு மதிப்பெண் அதிகம் கிடைக்கும். சுய ஈடுபாடு வகுப்பறையில் அவசர அவசரமாக எடுத்த குறிப்புகளை, வீட்டில் அமர்ந்து தெளிவாக எழுத வேண்டும். இதன்மூலம் நீங்கள் இரண்டு நன்மைகளை பெற முடியும். நடத்தப்பட்ட பாடத்தை ரிவிசன் செய்த மாதிரியும் இருக்கும் மற்றும் நல்ல ரெபரன்சாகவும் பயன்படும். இதில் முக்கிய விஷயம் என்னவெனில், பிறர் எடுத்த குறிப்பை பயன்படுத்துவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். தாங்களே சொந்தமாக எடுத்த குறிப்புகளை படிப்பதே சிறந்தது. அந்த குறிப்புகளுடன் உங்களின் சொந்த எண்ணங்களையும் சேர்க்கலாம். ஒரு விரிவுரையில் நீங்கள் குறிப்பெடுக்கும்போது, அந்த உரையை புரிந்து, இணைந்து செல்ல குறிப்பெடுத்தல் உதவுகிறது. குறிப்பை உங்களின் சொந்த கையெழுத்தில் எடுக்கும்போது, அதை திரும்ப வாசிக்கையில், என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை சரியாக அறிந்துகொள்ள முடியும். புத்தகத்திலிருந்தும் சிறப்பான வகையில் குறிப்பெடுக்க பழக வேண்டும். தேர்வு நேரத்தில் உங்களின் குறிப்புகள் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக