பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
SVG TNPTF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SVG TNPTF லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4/15/2016

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்திட வேண்டும். தொடக்கக்கல்வித் துறைக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.


                         சிவகங்கை: தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரில் மே மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். ஆனால் இந்தாண்டு; பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பத்தை கூட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து பெறாமல் கல்வித்துறை காலம் தாழ்த்தி வருகிறது. இது ஆசிரியர்களை அச்சமடைய செய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
        தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வை ஒவ்வொரு மே மாத விடுமுறையிலும் நடத்துவது வழக்கம். கலந்தாய்வில் பங்கு பெற விரும்பும் ஆசிரியர்களிடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தால் பெறப்பட்டு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்படும். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரால் பணியிட மூப்பின் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக ஆசிரியர் பட்டியலும் காலிப் பணியிட விபரமும் வெளியிடப்படும். இதில் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட காலி பணியிடங்களை பணியிட மூப்பின் அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் பெற்றுக்கொள்வர். மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வருகிற கல்வி ஆண்டின் முதல் நாளில் அதாவது ஜூன் முதல் நாளில் தாங்கள் மாறுதல் பெற்ற பள்ளியில் புதிதாக பணியேற்றுக் கொள்வார்கள். இதனால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படாமல் காக்கப்பட்டது. ஆசிரியர்களும் தங்கள் குடும்பங்களை எளிதாக புதிய இடத்திற்கு இடம்பெயர்வு செய்வதற்கு வசதியாகவும் இருந்தது.
        கடந்தாண்டு சரியான திட்டமிடல் இல்லாததால் பள்ளி திறந்த பின்பு மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனால் ஆசிரியர்கள் புதிய இடங்களில் பணியேற்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். அக்கலந்தாய்விலும் அரசாணைகளையும், செயல் முறைகளையும் புறந்தள்ளிவிட்டு  அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டால் பல்வேறு காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதால் நியாயமாக கலந்தாய்வில் பங்கேற்ற மூத்த ஆசிரியர்கள் உரிய பணியிடங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதனால்  ஆசிரியர் இயக்ககங்களில் கடுமையான எதிர்ப்பை கல்வித்துறை எதிர் நோக்க வேண்டியிருந்தது. 
        ஆனால் இந்தாண்டு இதுவரை மாறுதல் விண்ணப்பம் அளிப்பதற்கு எவ்வித அறிவிப்பும் கல்வி துறையால் வெளியிடப்படவில்லை. பள்ளி நிறைவடைவதற்கு இன்னும் ஓரு சில நாட்களே உள்ள நிலையில் கல்வி துறை மௌனம் சாதிப்பது என்பது வெளி மாவட்டம் மற்றும் மற்ற ஒன்றியங்களுக்கு மாறுதல் கோரி பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி அதிகாரிகளும் மேலிட தகவல்கள் இல்லாமல் இது குறித்து கருத்து கூற மறுக்கின்றனர். எனவே கல்வித்துறை வருகிற சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டாமல் உடனடியாக தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியுடன் ஆசிரியர்களிடம் விருப்ப மனுவை பெற்று காலிப்பணியிடங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மே மாத விடுமுறையிலேயே பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துவதுடன் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வையும் அளித்திட வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

4/06/2016

நமது கோரிக்கை இன்றைய தினமணியில் - 6.4.2016

வாக்களிப்பு உறுதி மொழிப் படிவங்களை பள்ளிகளுக்கு கூடுதலாக வழங்கக் கோரிக்கை

  • வாக்களிப்பை உறுதிசெய்யும் வகையிலான உறுதிமொழிப் படிவங்களை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்டச் செயலாளர் ஆ.முத்துப்பாண்டியன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தேர்தலில் வாக்களிக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்குவதற்கு உறுதிமொழிப்படிவங்களை பள்ளிகளுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்க ளாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மத, இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாடில்லாமல் வாக்களிப்போம் என்கின்ற உறுதிமொழியைப் பெறுவதற்காக இப்படிவங்களை வழங்கியுள்ளனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப படிவங்கள் வழங்காமல், பள்ளிக்கு ஒன்று வீதம் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 1,149 தொடக்க நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 68 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு படிவத்தை நகலெடுத்துக்கொடுப்பதில் தலைமை யாசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே மாவட்டத் தேர்தல் பிரிவு, பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உறுதிமொழி படிவங்களை அச்சடித்து வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நமது கோரிக்கை இன்றைய தினமலரில் - 6.4.2016


3/10/2016

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காததால் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முற்றுகை. 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நள்ளிரவு வரை போராட்டம்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியாக வரி விலக்கு கணக்கு எண்(TAN) பெறவில்லை என 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பிப்ரவரி மாதம் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களிலில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலரின் வரிவிலக்கு கணக்கு எண் மூலம் ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மட்டும் மாறுபட்டு செயல்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டினார்கள். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடன் கடந்த 2ந் தேதி நடத்திய பேச்சு வார்த்தையில் மார்ச் 4ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இது வரை ஊதியம் வழங்கப்படாததால் 20க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நள்ளிரவு வரை போராட்டம் நடத்தினார்கள்.
நேற்று (9.3.16) மாலை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்லல் வட்டாரத் தலைவர் ஜான் இக்னேஷியஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்லல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒன்று கூடினர். அதன்பின் மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளார் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், கல்லல் வட்டாரச் செயலாளர் சேவியர் சத்தியநாதன், மாவட்டத் துணைத் தலைவர் சூசைராஜ், பொருளாளர் ஜஸ்டின் திரவியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இராமர் அவர்களிடம் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து விளக்கம் கேட்டனர். மேலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூர்த்தி உடனடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி முற்றுகை போராட்டமாக மாறியது. ஆசிரியர்களுக்கு ஊதியம் பெற்று தராமல் அலுவலகத்தை விட்டு நகர மாட்டோம் என ஆசிரியர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் மற்ற ஒன்றியங்களில் உள்ள நடைமுறைப்படி கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. 
தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த  காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், கல்லல் காவல் ஆய்வாளர் கணபதி ஆகியோர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருடனும் அலைபேசியில் பேச்சு வார்ததை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை முடிவில் கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இராமர் ஆசிரியர்களின் ஊதிய பட்டியலில் உடனடியாக கையெழுத்திட்டார். மேலும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் மூர்த்தி அவர்களின் கட்டுபாட்டில் உள்ள மற்ற 6 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 10ந் தேதி காலை சம்பள பட்டியல் கையெழுத்திட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் ஓரிரு நாட்களில் ஊதியம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததின் பேரில் ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.