தமிழக அரசு 2006-ல் தமிழ் கற்றல் சட்டத்தை இயற்றியது. அந்த சட்டத்தின்படி 2006-07 கல்வியாண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப் படியாக தமிழ் கட்டாய பாடமாக மாற்றப்பட வேண்டும். அதன்படி இந்த கல்வி ஆண்டில்(2011-12) 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் கட்டாய பாடமாக உள்ளது.
ஆனால் 7,8,9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பகுதி-1, மொழிப் பாடமாக எதை தேர்ந்து எடுத்தார்களோ அதிலேயே 10-ம் வகுப்பு முடிக்கலாம். ஆனால் இப்போது வெளியாகி உள்ள 10-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் தமிழ் பாடம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் அல்லாமல் வேறு மொழியை பகுதி-1 மொழியாக தேர்ந்து எடுத்த மாணவர்கள், இந்த ஆண்டு பொதுத் தேர்வின் போது எந்த மொழித் தேர்வை எழுதுவார்கள் என்ற தெளிவு இல்லாத நிலை உள்ளது என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தார்.
இதை பயன்படுத்தி சில தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வியில் தமிழைத் தவிர வேறு மொழிப் பாடம் கிடையாது. எனவே உங்களது குழந்தைகளை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு மாற்றுங்கள் என பெற்றோரை திசை திருப்புவதாக அவர் கூறினார்.
மொழிப் பாடத்தை பொறுத்தவரை சமச்சீர் கல்வி சட்டம் வந்தாலும் தமிழ் கட்டாயம் என்பது படிப் படியாகத்தான் அமலாகும். இந்த ஆண்டு சமச்சீர் கல்வியில் தமிழைத் தவிர பிற மொழி பாடங்களில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. எனவே அதே புத்தகங்கள் நீடிக்கின்றன என்று பொதுக்கல்வி வாரிய உறுப்பினர் விஜயன் தெரிவித்தார்.
ஆனாலும் தமிழைத் தவிர பிற மொழியை எடுத்த மாணவர்களிடம் குழப்பம் நீடிக்கிறது. 7,8,9-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள பகுதி-1 மொழிப் பாடத்திலேயே தேர்வு எழுதலாம் என்று அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் எதிர் பார்க்கின்றனர்.
நன்றி: மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக