பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/22/2013

சத்துணவுக்கு அழுகிய முட்டைகள் சப்ளை?

நாமக்கல்: முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், சத்துணவுக்கான முட்டை சப்ளையில், காலாவதியான மற்றும் அழுகிய முட்டைகளை கலப்படம் செய்யப்படுவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யவும், குழந்தை பருவ இறப்பை தவிர்க்கவும், உடல்திறன் அதிகரிக்கவும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், பள்ளிகளில் இடைநிற்றலை தவிர்க்கவும், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் சமூக நலத்துறை சார்பில், சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சத்துணவு திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்களில் வாரத்தில் மூன்று நாட்களும், பள்ளிகளில், வாரத்தில் ஐந்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. இதற்காக, நாமக்கல் பகுதிகளில் இருந்து, தினமும் 70 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்றன.
சத்துணவிற்கு வழங்கப்படும் முட்டை, தலா, 46 முதல், 52 கிராம் இருக்க வேண்டும். ஒரு முட்டைக்கு, அரசு கொடுக்கும் விலை, 3.18 ரூபாய். அதேபோல், 12 முட்டைகளை, ஒரே நேரத்தில் எடை போட்டால் 552 கிராம் இருக்க வேண்டும். நாள் வாரியாக முட்டை சப்ளை செய்யப்படுவதை உறுதி செய்ய தினமும் ஒரு வண்ணத்தில் முட்டையின் மீது, "இங்க்" பதிவு செய்ய வேண்டும். அரசின் இந்த கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டு டெண்டர் எடுத்தவர்கள், குழந்தைகளுக்கு, முட்டைகளை சப்ளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இரு மாதங்களாக நாமக்கல் பகுதியில், முட்டை கொள்முதல் விலை அதிகபட்சமாக, 4.15 ரூபாய் வரை சென்றது. அதனால் அரசிடம் டெண்டர் எடுத்தவர்களுக்கு உரிய லாபம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அரசின் விலைக்கும், கொள்முதல் விலைக்கும், ஒரு முட்டைக்கு, 1.00 ரூபாய் வரை இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால், குறைந்த எடையுள்ள முட்டை, விற்காமல் காலாவதியான முட்டை ஆகியவற்றை, சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டையோடு கலந்து விடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சத்துணவு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: தினசரி மார்க்கெட்டில் இன்றைய நிலவரப்படி முட்டையின் விலை உயர்ந்துள்ள நிலையில், அரசிடம் டெண்டர் எடுத்தவர்கள், அரசு நிர்ணயித்த விலைக்கே சப்ளை செய்கின்றனர். அதில், அவர்களுக்கு லாபம் குறைந்ததால் காலாவதி முட்டைகளை கலந்து விடுகின்றனர். அதனால், சத்துணவு வழங்கும் பொறுப்பாளர்களுக்கும், புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சத்துணவு முட்டையை வேக வைக்கும் முன், தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட வேண்டும். அதில், மிதக்கும் முட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். உடைந்த முட்டைகள் மற்றும் வேக வைக்கும் போது உடையும் முட்டைகளை, குழந்தைகளுக்கு தரக் கூடாது. அந்த முட்டைகளை, தனியாக எடுத்து கணக்கு வைத்து, டெண்டர் எடுத்தவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யும் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது: சத்துணவுக்கு சப்ளை செய்யப்படும் முட்டைகள், கோழி, முட்டையிட்ட தேதியில் இருந்து, மூன்று நாட்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அதனால் முட்டையில் கலப்படம் மற்றும் அழுகிய முட்டை சப்ளை செய்ய முடியாது. யூனியன் வாரியாக, முட்டை சப்ளைக்கு டெண்டர் எடுத்தவர்கள், ஆட்களை நியமித்து, கண்காணித்து வருகின்றனர்.
குளிர்கால சீசன் என்பதால், முட்டையை, 20 நாள் வரை வைத்திருந்தாலும் கெடாது. தற்போதைய விலை உயர்வுக்கும், அரசின் டெண்டரில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் வித்தியாசம் அதிகரித்துள்ளது. அதனால், முட்டை டெண்டர் எடுத்தவர்கள், ஏற்ற, இறக்கத்தை சந்தித்தே ஆக வேண்டும்; வேறு வழியில்லை. அழுகிய முட்டைகள் இருந்தால், தண்ணீரில் போடும் போதே, தெரிந்துவிடும். அதை, டெண்டர் எடுத்தவர்களிடம் திருப்பி கொடுத்தால், எடுத்துக் கொள்வர். அந்த, நடைமுறை ஏற்கனவே உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக