திண்டுக்கல், செப். 17: ஆசிரியர் பணியிட மாறுதல் முறையாக நடத்தப்படவில்லை என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்ட பணியிட மாறுதலை ரத்து செய்யக் கோரியும், பணியிட மாறுதல் கலந்தாய்வு மையத்தில் ஆசிரியர்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கெனவே பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுவிட்டு, வெறும் கண் துடைப்புக்காக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும், காலியாக உள்ள பணியிட விவரங்கள் குறித்த தகவல்களை அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பு இதுவரையிலும் ஒட்டப்படவில்லை என்றும், இதனால் இதுவரை வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியும், சனிக்கிழமை கலந்தாய்வு மைய அறையின் முன் ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொருளாளர் மோசஸ், மாவட்டத் தலைவர் ஜான் எட்வர்டு, மாவட்டச் செயலர் கணேசன், பொருளாளர் அமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Source: Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக