பார்வை பறிபோயிருந்தாலும் திறமையாக பாடம் நடத்தும் ஆசிரியரின் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான லுத்திரன் மிஷன் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் மல்லிகா ஜனத், பிளஸ்1, 2 மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு திடீரென மல்லிகா ஜனத்தின் கண்ணில் பிரச்சினை ஏற்பட்டு கண் பார்வை முற்றிலும் பறிபோனது. இந்த நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர் ஒருவரின் உதவியுடன் மல்லிகா ஜனத் பாடம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கண் பார்வை பற்றிய மருத்துவ அறிக்கையை மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் இருந்து பெற்று வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கூறியது. அது போல் ஆசிரியையும் 100 சதவிதம் கண் பார்வை போய்விட்டது என்று கூறப்பட்ட மருத்துவ சான்றிதழை அளித்தார்.
அதன்பிறகு, ஆசிரியைக்கான சம்பளத்தை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் பணியை பள்ளி நிர்வாகம் நிறுத்திவிட்டது. சம்பளத்தைப் பெற்றுத் தரக் கோரி பள்ளிக்கும், அரசுக்கும் மல்லிகா ஜனத் மனு அனுப்பினார். தன்னை பணியில் நீட்டிக்கச் செய்யக் கோரி இருந்தார். தான் ஓய்வு பெறும் வரை தன்னை பணியில் நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அளித்த உத்தரவில், ஆசிரியைக்கு பார்வைக் குறைபாடுதான் ஏற்பட்டுள்ளது. அவரது ஆசிரியர் திறன் குறையவில்லை. இனி அவர பாடம் நடத்த முடியாது என்று மருத்துவ அறிக்கை கூறவில்லை.
பார்வையற்றோருக்கு நியமனம் அளிப்பதற்கு சமூக நலத்துறையின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு சம வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சட்டமும் உள்ளது.
அவர் நல்ல முறையில் ஆசிரியர் பணியாற்றி இருக்கிறார். பார்வை பறிபோன பிறகு கூட மாணவர்களுககான தேர்ச்சி விகிதத்தை 96 சதவீதமாக ஆக்கியுள்ளார். பார்வையில்லாததால் கடமையாற்ற முடியாதவர் என்ற நிலை ஏற்படவேயில்லை.
எனவே, ஒய்வு பெறும் வரை மல்லிகா ஜனத்தை, உதவியாளரை வைத்து பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். அவருக்கு சம்பளம் வழங்குவது பற்றி அரசிடம் பள்ளி நிர்வாகம் கேட்கவேண்டும். அதுபற்றி அரசும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Thanks: Kalvimalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக