விருதுநகர்: "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான, "தத்கால்" முறையின் கீழ், இன்றும், நாளையும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் தனியார் பதிவிறக்க மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டாம்" என அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: வரும், 26ல் துவங்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் "தத்கால்" திட்டத்தின் கீழ், இன்றும், நாளையும், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கென, மாவட்ட தலைநகரங்களில், சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்களில், இதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். தனியார் பதிவிறக்க மையங்கள் மூலம், விண்ணணப்பிக்க வேண்டாம்.
உரிய சான்றிதழ்களுடன், தேர்வுக் கட்டணம் 125 ரூபாய், சிறப்பு அனுமதி கட்டணம், 500 ரூபாய், ஆன்-லைன் பதிவுக் கட்டணம், 50 ரூபாய் என, 675 ரூபாயை, பணமாக செலுத்த வேண்டும். இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய நாட்கள் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும். அதில், தேர்வு மைய விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக