பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

12/24/2011

நேர்மையான அரசு ஊழியர்களுக்கு ரூ. 2 லட்சம் முதல்வர் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் நேர்மையான முறையில் பணியாற்றும் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள், அரசுப் பணியாளர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவர்கள் மக்களுக்கான நற்பணி ஆற்றுவதிலும், அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய, அரசு ஊழியர்கள் கையாண்ட உத்திகள், புது முயற்சிகள், மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக அமையும் தொடக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தன்று, முதல்வரால் ‘நல் ஆளுமை விருது’ என்ற ஒரு விருது வழங்கிட முடிவெடுத்துள்ளார்.

இவ்விருது, பொதுமக்களுக்கான சேவைகளை மேம்படுத்துதல், மேம்பாட்டு முயற்சிகள், வரிமேலாண்மை, நிர்வாக சீர்த்திருத்தங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்ட முறையை பாராட்டும் வகையில் இருக்கும்.

2 லட்சம் பரிசுத் தொகை

இதன்படி, மாநிலத்தின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் கண்டறியப்பட்டு, அறிக்கை பெறப்பட்டு, அவை அரசினால் அமைக்கப்படும் வல்லுநர் குழுவினால் ஆராயப்பட்டு, ‘சிறந்த ஆளுகை’, ‘நிர்வாகத்தில் புது உத்திகள் புகுத்துதல்’ ஆகியவற்றை மிகச்சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துகின்ற மூன்று அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் திறமைகளை பாராட்டும் வகையில், 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பதக்கம் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும்.

திறமையான நிர்வாகம்

தமிழக அளவில் முதல் முறையாக அரசு நிர்வாகத்தில் ஊழியர்களுக்கிடையே புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட இந்த முன் மாதிரி திட்டத்திற்கு, விருதுகளுக்காக 6 லட்சம் ரூபாயும், இவற்றை தேர்ந்தெடுக்கவும், ஆவணப்படுத்தவும் 8 லட்சம் ரூபாயும், என மொத்தம் ஆண்டொன்றுக்கு 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்கள்.

இதன் மூலம், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறந்த அலுவலக நடைமுறைகளும், முன்மாதிரியான உத்திகளும் மற்றவர்களால் பின்பற்றப்பட்டு, அரசு நிர்வாகம் இன்னும் செம்மையாக செயல்பட வழிவகுக்கும். இதனால் அரசு அலுவலர்களிடையே புதிய உத்திகளை கையாண்டு, மக்களுக்கு இன்னும் மேன்மையான முறையில் சேவைகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் வலுவடைய வாய்ப்புகள் அதிகமாகும். இதனால் தமிழக அரசு நிர்வாகப் பணிகள் இந்திய அளவில் சிறந்த இடத்தை அடையும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக